செய்திகள்

27 ஆண்டுகளுக்கு பிறகு ஈராக்கிற்கு விமான சேவையை தொடங்கிய சவுதி விமான நிறுவனம்

Published On 2017-10-19 05:40 GMT   |   Update On 2017-10-19 05:40 GMT
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ரியாத்:

ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ஈராக் உடனான விமான சேவைகளை சவுதி அரேபியா நிறுத்தியது.

தற்போது அரபு பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், ஈராக்குடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சவுதி அரேபியா விரும்புகிறது. இதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஷியா மதகுரு உள்ளிட்ட ஈராக் உயர் தலைவர்கள் சிலர் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டது நல்ல சூழலை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு உறவு துளிர்விடத் தொடங்கியதை பிரதிபலிக்கும் வகையில் சவுதி அரேபியாவின் பட்ஜெட் விமான சேவை நிறுவனமான பிளைனாஸ், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு நேரடி விமான சேவையை தொடங்கி உள்ளது.

27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாக்தாத் செல்லும் முதல் விமானம் புறப்பட்டதும் இந்த தகவலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பிளைனாஸ்.

இதற்கிடையே 1990-ல் மூடப்பட்ட அரார் பகுதியில் உள்ள தரைவழி எல்லையை மீண்டும் திறக்கவும் சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News