செய்திகள்

மெக்சிகோவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

Published On 2017-09-24 11:01 GMT   |   Update On 2017-09-24 11:01 GMT
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 300-ஐ கடந்துள்ள நிலையில் அங்கு இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியை அடுத்துள்ள பியூப்லா பிறபகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 1985-ம் ஆண்டு இந்நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர்.

அந்த கோரச் சம்பவத்தின் 32-வது ஆண்டு நினைவு நாளன்று மீண்டும் தாக்கிய இந்த நிலநடுக்கம் பள்ளிக்கூடங்கள், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான பலமாடி கட்டிடங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தரைமட்டமாக்கியது.

முன்னர் வந்த முதல்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானதாக தெரியவந்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 300-ஐ கடந்துதுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், கவுதமாலாவை ஒட்டியுள்ள மெக்சிகோ நாட்டின் கடற்கரையோரத்தில் உள்ள தென் மாநிலமான சியாப்பாஸ் அருகேயுள்ள டோனாலா நகர் பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோலாலாவில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தெற்கு-தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவானதாக பசிபிக் பெருங்கடல் பகுதி சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News