செய்திகள்

மியான்மரில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்காளதேசத்தில் தஞ்சம்

Published On 2017-09-10 00:19 GMT   |   Update On 2017-09-10 00:19 GMT
மியான்மரில் இருந்து கடந்த 15 நாளில் மட்டும் 3 லட்சம் பேர் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
டாக்கா:

மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டு அரசு பாரபட்சம் காட்டுகிறது.

அவர்கள் மியான்மரின் பூர்விக குடிமக்கள் என்று ஒரு தரப்பினரும், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.

மியான்மரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தபோதும், அவர்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் மீது புத்த மதத்தை சேர்ந்த மக்களே வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனால் அந்த மக்கள் உயிருக்கு பயந்து வங்காளதேசம் சென்றவண்ணம் இருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இப்படி அவர்கள் வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருவது அதிகரித்து வருகிறது.



கடந்த 15 நாளில் மட்டும் 3 லட்சம் பேர் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் மியான்மரில் இருந்து வங்காளதேசம் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.

ஐ.நா. அகதிகள் முகமையின் செய்தி தொடர்பாளர் ஜோசப் திரிபுரா இது பற்றி சொல்லும்போது, “ஆகஸ்டு 25-ந் தேதியில் இருந்து வங்காளதேசத்துக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம்கள் சென்றுள்ளனர்” என்று கூறினார்.

பெரும்பாலான மக்கள் நடந்தும், படகுகளிலும் வங்காளதேசம் செல்கின்றனர்.

கடந்த புதன்கிழமை மட்டும் 300 படகுகளில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வங்காளதேசம் சென்று அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 
Tags:    

Similar News