செய்திகள்

13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன மோதிரத்தை ‘மீட்டுக் கொடுத்த’ கேரட்!

Published On 2017-08-25 19:12 GMT   |   Update On 2017-08-25 19:12 GMT
கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம் காணாமல் போன மோதிரம் கிடைத்துள்ளது.
ஒட்டாவா:

கனடா நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மோதிரத்தை தொலைத்த பெண்மணி ஒருவருக்கு தற்போது தோட்டத்தில் விளைந்த கேரட் மூலம் காணாமல் போன மோதிரம் கிடைத்துள்ளது.

கனடாவில் அல்பெர்டா நகரில் வசிக்கும் மேரி கிராம்ஸ் என்ற பெண்மணி 2004-ம் ஆண்டில் தனது காய்கறி தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருக்கும் போது தனது வைர மோதிரத்தை மண்ணில் தவறவிட்டார். வைர மோதிரத்தை தவறவிட்டாலும், இந்த சம்பவத்தை வேறு யாரிடமும் மேரி கூறவில்லை.



இந்நிலையில் சமீபத்தில், மேரி கிராம்சின் மருமகள் கொலீன் டேலி காய்கறித் தோட்டத்தில் விளைந்த கேரட் ஒன்றை மண்ணில் இருந்து எடுக்கும் போது கேரட் உடன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்து போன வைர மோதிரமும் வந்துள்ளது.

மோதிரம் கிடைத்த தகவல் கேட்டதும் ஆச்சரியமும், அளவிலா ஆனந்தமும் அடைந்திருக்கிறார் 83 வயதான மேரி கிராம்ஸ்.
மோதிரத்தைத் தொலைத்த பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்த மேரி, அந்த விஷயத்தை தனது கணவரிடம் அப்போதே சொல்லியிருக்கலாம் என்று இப்போது எண்ணுகிறார்.

ஏனெனில், மேரியின் கணவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். தொலைத்த மோதிரத்தை கேரட் மூலம் கனடா பெண்மணி திரும்பப் பெற்றது அதிசயம்தான். ஆனால் தொலைக்கப்பட்ட மோதிரத்தை பல ஆண்டுகளுக்குப் பின் திரும்பப் பெற்றது இது முதல்முறையல்ல.

சுவீடன் நாட்டுப் பெண் ஒருவர் தான் தவறவிட்ட திருமண மோதிரத்தை 16 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுத்த சம்பவம் கடந்த 2011-ல் நடந்தது. 
Tags:    

Similar News