செய்திகள்

நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்கள்-விவசாயிகள் கடும் மோதல்: 33 பேர் உயிரிழப்பு

Published On 2017-07-20 16:13 GMT   |   Update On 2017-07-20 16:13 GMT
நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 33 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கனோ:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் ‘ஃபுலானி’ எனப்படும் நாடோடிகள் இனத்தை சேர்ந்த மேய்ப்பர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு, பிழைத்து வருகின்றனர். நிலையாக ஒரு ஊரில் தங்காமல் ஒவ்வொரு ஊராக சென்று தற்காலிக குடிசைகள் அமைத்து தங்குவது வழக்கம். இவ்வாறு மேய்ச்சலில் ஈடுபடும்போது, பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக விவசாயிகளுக்கும், அவர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கதுனா நகரம் அருகே உள்ள கஜுரு கிராமத்தில் தங்கியிருந்த புலானி மேய்ப்பர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நிலம் மற்றும் தண்ணீர் தொடர்பாக பிரச்சினை உருவானது. அப்போது, புலானி இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரையும் அவரது தந்தையையும் கிராம மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இதனால் இரு தரப்பினருக்குமிடையே கடும் மோதல் வெடித்தது.

புலானி இனத்தவர்கள் கிராமத்திற்குள் சென்று தாக்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, கிராம மக்கள் புலானி குடிசைப்பகுதிக்கு தீவைத்தனர். இதிலும் பலர் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி காவல்துறை ஆணையர் அக்யோல் அபே கூறும்போது, ‘கால்நடை மேயப்பவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இரண்டு நாட்களாக நடந்த வன்முறை மோதல்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News