செய்திகள்

ஏமன் நாட்டில் 2 மாதத்தில் காலராவுக்கு 1,300 பேர் பலி

Published On 2017-06-25 05:46 GMT   |   Update On 2017-06-25 05:46 GMT
ஏமன் நாட்டில் 2 மாதத்தில் காலரா நோய்க்கு 1,300 பேர் உயிர் இழந்துள்ளனர். 2 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சனா:

அரபு நாடுகளில ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஹூதி புரட்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். அவர்கள் தலைநகரம் சனா உள்பட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

உள்நாட்டு சண்டையால் 1 கோடியே 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு போதிய இடமில்லை. ஆங்காங்கே கூடாரங்களில் தங்கி இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளோ மற்ற சுகாதார வசதிகளோ கிடைக்கவில்லை.



இதனால் கடந்த மாதங்களுக்கு முன்பு பல இடங்களில் காலரா நோய் ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய மருத்துவ குழுக்கள் இல்லை. இதனால் தொடர்ந்து காலரா நோய் பரவி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக காலரா நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

இதுவரை 2 லட்சம் பேரை நோய் தாக்கி உள்ளது. 1300 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் 4-ல் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர். தொடர்ந்து நிலை மோசமாக உள்ளது.

எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உரிய ஊட்ட சத்துணவு கிடைக்காமல் 2 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News