செய்திகள்

கேமரூனில் தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் பலி

Published On 2017-06-23 00:33 GMT   |   Update On 2017-06-23 00:33 GMT
கேமரூனில் போகோஹரம் இயக்கத்தின் தற்கொலைப்படையினர் அடுத்தடுத்து 2 குண்டுகளை வெடிக்கச்செய்தனர். இதில் அப்பாவி மக்கள் 6 பேர் சிக்கி பலியாகினர்.
யாவுண்டே:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கேமரூன். நைஜீரியா, நைஜர் நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையிலான அரசை நிறுவும் நோக்கத்துடன் போகோஹரம் இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் கேமரூனிலும் காலூன்றி அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கொலோபட்டா என்ற இடத்தில் நேற்று முன்தினம் போகோஹரம் இயக்கத்தின் தற்கொலைப்படையினர் அடுத்தடுத்து 2 குண்டுகளை வெடிக்கச்செய்தனர். பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில், அப்பாவி மக்கள் 6 பேர் சிக்கி பலியாகினர். குண்டுவெடிப்புகளை நடத்திய பயங்கரவாதிகள் 2 பேரும் உடல்சிதறி உயிரிழந்தனர். கேமரூன் பாதுகாப்பு படை வட்டாரங்கள் இந்த குண்டுவெடிப்பையும், அதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பையும் உறுதி செய்துள்ளன. 

இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொலோபட்டாவில் போகாஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் கொலோபட்டா அருகில் லிமானி என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 அப்பாவி மக்கள் பலியானதும் நினைவுகூரத்தக்கது. 
Tags:    

Similar News