செய்திகள்

பாகிஸ்தானில் கடற்படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

Published On 2017-06-21 00:24 GMT   |   Update On 2017-06-21 00:24 GMT
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 கடற்படை வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவடார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் கடற்படை வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தனர்.

ஜிவானி நகர் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் 4 பேர் கடற்படை வீரர்கள் சென்ற ஒரு வாகனத்தை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் கடற்படை வீரர்களை குறிவைத்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

பயங்கரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் கடற்படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். மேலும் 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் முதல்-மந்திரி சனூல்லா ஜெஹ்ரி இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில் “நாங்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளின் முன்பு அடிபணியமாட்டோம்” என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News