செய்திகள்

குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி: மீண்டும் வலியுறுத்தியது இந்தியா

Published On 2017-04-26 09:49 GMT   |   Update On 2017-04-26 09:50 GMT
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு தூதரக உதவிகள் வழங்க வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தூதரக உதவிகளை வழங்கும்படி பலமுறை இந்தியா கோரிக்கை வைத்தும், அதனை ஏற்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

மேலும், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேசினார். அப்போது, குல்பூ‌ஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரத்தில் இந்தியாவின் கவலையை தெரிவித்தார். அவருக்கு தூதரக உதவி அளிக்கவும் அனுமதி கோரினார். மேலும் ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை நகல் மற்றும் தூக்குதண்டனை தீர்ப்பின் நகலையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை செயலாளர் டெமினா ஜன்ஜுவாவை மீண்டும் சந்திக்க இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே நேரம் கேட்டிருந்தார். இந்த சந்திப்பு கடந்த 19-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தூதர் கவுதம் பம்பாவாலே இன்று பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் டெமினா ஜன்ஜூவாவை சந்தித்து பேசினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பம்பாவாலே கூறும்போது, “ஜாதவ் மீதான குற்றப்பத்திரிகை நகல் மற்றும் தூக்குத்தண்டனை தீர்ப்பின் நகலையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன். மேலும் ஜாதவுக்கு சர்வதேச சட்ட மனிதாபிமான அடிப்படையில் தூதரக உதவியை இந்தியா நாடுகிறது’ என்றார்.

Similar News