செய்திகள்

பாகிஸ்தானை நவாசும், சர்தாரியும் 30 ஆண்டுகளாக கொள்ளையடிக்கின்றனர்: இம்ரான்கான் குற்றச்சாட்டு

Published On 2017-04-24 06:13 GMT   |   Update On 2017-04-24 06:13 GMT
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரியும் பாகிஸ்தானை கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடித்து வருகின்றனர் என இம்ரான்கான் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்,
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மீதான பனாமா ஆவண ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. இருந்தாலும் அது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்தது.

அந்த தீர்ப்புக்கு பிறகு தாது என்ற இடத்தில் நடந்த கட்சி பேரணியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தெர்க்கரிக்-இ- இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

“பிரதமர் நவாஸ் செரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரியும் பாகிஸ்தானை கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடித்து வருகின்றனர்.



பிரதமர் நவாஸ் செரீப் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே அதற்கு பொறுப்பேற்று தார்மீக அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவருக்கு சமமாக ஆசிப் அலி சர்தாரியும் ஊழல் செய்துள்ளார்.

எனவே இவர்கள் இருவருக்கும் எதிரான போரில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். பாகிஸ்தானில் வாழும் ஏழை மக்களின் வாழ்வு உயர நான் போராடி வருகிறேன்.

எனவே, வருகிற 28-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கட்சி பேரணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News