செய்திகள்

ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது

Published On 2017-04-20 06:00 GMT   |   Update On 2017-04-20 06:00 GMT
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நியூயார்க்:

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18).

தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார்.

இங்கு 30 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து மாலியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாலியா பணிபுரியும் நிறுவனத்துக்குள் அத்து மீறி புகுந்தார். அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழுதப்பட்ட பேனர் ஒன்றை எடுத்து வந்திருந்தார்.

மாலியா இருந்த அறையின் ஜன்னல் வழியாக அந்த பேனரை காட்டினார். அவரை பாதுகாப்பு ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

அடுத்து 2 நாட்கள் கழித்து மீண்டும் அந்த வாலிபர் அங்கு வந்தார். அவர், பக்கத்து கட்டிடத்தில் ஏறி நின்று மாலியா இருந்த அறையை நோக்கி அதே பேனரை காண்பித்தார்.

எனவே, அந்த நிறுவனத்தினர் வாலிபர் குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த வாலிபர் புரூக்லின் நகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவரது பெயர் ஜெயர் நில்டான் கர்டோசா என்று தெரிய வந்தது. இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர். அவரை பற்றிய மற்ற விவரங்கள் எதையும் வெளியிடவில்லை.

அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாக பாதுகாப்பு படையினர் கூறி உள்ளனர். ஒபாமா அதிபராக இருந்த போது மாலியாவை சந்திக்கும் வகையில் வெள்ளை மாளிகைக்கே இவர் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Similar News