செய்திகள்

ஆப்ரிக்கர்களைத் தாக்கிய இந்தியர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும்: ஐ.நா

Published On 2017-04-04 08:46 GMT   |   Update On 2017-04-04 09:32 GMT
ஆப்ரிக்கர்களைத் தாக்கிய இந்தியர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா கருத்துத் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 12-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் அதிக அளவு போதைப் பொருள் பயன்படுத்தியதின் காரணமாக, சமீபத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மாணவனின் மரணத்திற்கு அப்பகுதியில் வசித்து வரும் நைஜீரியர்கள் காரணமாக இருக்கலாம் எனக் கருதிய மாணவனின் உறவினர்கள் நைஜீரியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் தாக்குதலில் காயமடைந்த நைஜீரிய நாட்டவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து அன்சால் மால் என்ற வணிக வளாகம் அருகே நைஜீரியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சில பேரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரியர்களைத் தாக்கிய இந்தியர்கள் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா கருத்துத் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களிடம் கூறுகையில் “ இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Similar News