செய்திகள்

ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து: யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-27 23:05 GMT   |   Update On 2017-03-27 23:05 GMT
ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கொழும்பு:

இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இலங்கை செல்லும் பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தார். இந்த நிலையில் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் தெரிவித்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலின் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் வரவேண்டும், ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கவேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் வைத்திருந்தனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், தங்களுக்கு வீடுகள் வழங்குவதாக அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈழத்து கலைஞர்கள் கூறும்போது, “ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் ஈழத்து மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு, அதனை திறந்து வைக்க வரட்டும்” என்றனர். 

Similar News