செய்திகள்

எகிப்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் குண்டு வெடிப்பு: 10 ராணுவ வீரர்கள் பலி

Published On 2017-03-23 16:04 GMT   |   Update On 2017-03-23 16:04 GMT
எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
கெய்ரோ:

எகிப்தில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் ஆட்சியை கவிழ்ப்புக்கு காரணமாக அமைந்த புரட்சிக்குப் பின்னர் வடக்கு மற்றும் மத்திய சினாய் பகுதியில் பலமுறை தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. போலீஸ் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வடக்கு சினாய் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் ஒரு இடத்தை இன்று அதிகாலை ராணுவம் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, தப்பி ஓடிய தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் துரத்திச் சென்றபோது, அவர்களின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வீசி தாக்கினர்.

இதில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்து, அதில் இருந்த 3 அதிகாரிகள் உள்பட 10 பேர் பலியாகினர். இந்த தேடுதல் வேட்டையின்போது 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 7 பேர் கைது செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான 18 தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக ராணுவம் கூறிய நான்கு நாட்களில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News