ரசாயன விஷத்தால் வடகொரியா அதிபர் அண்ணன் துடிதுடித்து இறந்தார்: மலேசிய மந்திரி தகவல்
கோலாலம்பூர்:
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம் (42). இவர் கடந்த 13-ந்தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார்.
விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன விஷப்பவுடரை வீசியதாக கூறப்படுகிறது.
அது தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே கிம் ஜாங்-நம் முகத்தில் வீசப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற ரசாயன பவுடர் மிக கொடுமையான விஷத்தன்மை உடையது.
முகத்தில் வீசப்பட்டவுடன் அவருக்கு மூச்சுத் திணறலுடன் தாடை இறுக்கமும் ஏற்பட்டது. உடனே அவரை ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் உடல் முழுவதும் நரம்பு மண்டலம் பாதித்த நிலையில் 15 முதல் 20 நிமிடங்களில் கடுமையான வேதனையால் துடிதுடித்து இறந்தார். இத்தகவலை மலேசிய சுகாதார துறை மந்திரி எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
‘வி எக்ஸ்’ மருந்து கடுமையான விஷம் என ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.