செய்திகள்

வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல கூலி ரூ.6 ஆயிரம்: கொலையாளி பெண் வாக்குமூலம்

Published On 2017-02-26 05:13 GMT   |   Update On 2017-02-26 05:13 GMT
வடகொரிய அதிபர் அண்ணனை கொல்ல ரூ.6 ஆயிரம் கூலி வழங்கப்பட்டதாக கொலையாளி பெண் வாக்குமூலம் அளித்தார்.
கோலாலம்பூர்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங்- யங்கின் அண்ணன் கிம்ஜாங்-நம். இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடந்த 13-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது முகத்தில் வி.எக்ஸ் என்னும் கொடிய ரசாயன வி‌ஷத்தை வீசி இக்கொலை நடத்தப்பட்டது. இந்த ரசாயன பொருளை விமான நிலையத்தில் அமர்ந்திருந்த கிம்ஜாங்-நம் முகத்தில் ஒரு பெண் வீசியது அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து தேடப்பட்டு வந்த அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் சிதிஅய்சியா. இந்தோனேசியாவை சேர்ந்தவர்.

அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த தன்னிடம் 4 பேர் ஒருவிதமான பொருளை கொடுத்தனர். டி.வி. வேடிக்கை நிகழ்ச்சிக்காக அதனை ஒரு நபர் மீது வீச வேண்டும் என்றனர். அந்த பொருள் குழந்தைகள் உடலில் தடவும் வாசனை எண்ணெய் என்றும் கூறினர் என்றார்.

அதற்காக தனக்கு 90 அமெரிக்க டாலர் அதாவது ரூ.6 ஆயிரம் தந்தனர் என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக வியட்நாமை சேர்ந்த டோன் திஹுவாங் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டார்.



கொலை செய்யப்பட்ட கிம்ஜாங்-நம் வடகொரிய முன்னாள் அதிபர் கிம்ஜாங்- இல்லின் முதல் மனைவியின் மகன் ஆவார். இவரை குடும்பத்தில் இருந்தும், அரசியலில் இருந்தும் அதிபர் கிம்ஜாங்-இல் ஒதுக்கி வைத்திருந்தார்.

மேலும் இளைய மகனான தற்போதைய அதிபர் கிம்ஜாங்-யங்கை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். அதையடுத்து வடகொரியாவில் இருந்து வெளியேறிய கிம்ஜாங்-நம் சீனாவின் மக்கால் பகுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 13-ந்தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டார். என்றாவது ஒருநாள் தனக்கு அவர் அரசியல் போட்டியாக அவர் வரலாம் என கருதி வடகொரிய அதிபர் கிம்ஜாங்-யங் கூலிப் படையை ஏவி அவரை கொன்று இருக்கலாம் என்ற வதந்தியும் பரவி வருகிறது.

Similar News