செய்திகள்

வழிபாட்டு தல தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் 205 பேர் கைது

Published On 2017-02-19 19:11 GMT   |   Update On 2017-02-19 19:11 GMT
பாகிஸ்தானில் செவான் நகரில் வழிபாட்டுத்தலத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
லாகூர்:

பாகிஸ்தானில் செவான் நகரில் உள்ள சுபி பிரிவினரின் வழிபாட்டுத்தலம் ஒன்றில் ஐ.எஸ். இயக்கத்தினர் கடந்த 16-ந் தேதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல், பாகிஸ்தானையே உலுக்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நவாஸ் ஷெரீப் அரசு முடுக்கி விட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அங்குள்ள பஞ்சாப் மாகாணம் முழுவதும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வேட்டையின்போது 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி லாகூரில் போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “மாகாணம் முழுவதும் தொடர்ந்து 5-வது நாளாக பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாடாமிபாக், ரெய்வின்ட், சிவில் லைன்ஸ், பழைய அனார்கலி, குல்ஷான் இ ரவி, குல்பெர்க், காலிப் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற பகுதிகளில் எல்லாம் சேர்க்கிறபோது மொத்தம் 205 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பலர் ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஆவர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார். 

Similar News