செய்திகள்

ஹிட்லரைப் போல தோற்றமுடைய நபர் ஆஸ்திரியாவில் கைது

Published On 2017-02-14 10:43 GMT   |   Update On 2017-02-14 10:43 GMT
ஆஸ்திரியா நாட்டில் ஹிட்டலரைப் போல தோற்றம் கொண்டு, ஹிட்லர் பிறந்த நகரமான ப்ரானாவ் என்ற இடத்தில் சுற்றித் திரிந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வியன்னா:

இரண்டாம் உலகப் போருக்கு காரணமான அடால்ப் ஹிட்லர், 1889-ம் ஆண்டில் ஆஸ்திரிய நாட்டில் ப்ரானாவ் என்ற இடத்தில் பிறந்தவர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும், சிறு வயதிலேயே ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்து, ஜெர்மனியை ஆட்சி செய்து வரலாற்றில் இடம் பிடித்தவர். நாஜி கொள்கைகளை தனது உயிர் மூச்சாக கொண்ட சர்வாதிகாரி ஹிட்லர், இரண்டாம் உலகப் போரில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹிட்லரின் மரணத்தை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.  

இந்நிலையில், ஆஸ்திரியாவின் ப்ரானாவ் நகரில் ஹிட்லர் பிறந்த வீட்டின் அருகே, ஹிட்லரைப் போல தோற்றம் கொண்ட நபர் ஒருவர், ஹிட்லரைப் போலவே உடையலங்காரம் செய்து, அப்பகுதியில் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே தீவிரமாக தேடி அந்நபரை கைது செய்துள்ளனர்.

ஹிட்லரைப் போலவே சிறிய மீசை வைத்து, சிகையலங்காரம் செய்துள்ள அந்நபர், தனது பேரை ஹரால்டு ஹிட்லர் எனக் கூறியுள்ளார். ஹிட்லரின் நாஜிக் கருத்துக்கள் பின்பற்றப்படுதலும், பரப்புதலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதன் காரணமாக, ஹிட்லரின் உருவத்தை பின்பற்றிய, ஹரால்டு ஹிட்லர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News