செய்திகள்

டர்பன் அணிந்தால் பள்ளியில் சேர்க்க முடியாது: ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவனுக்கு அநீதி

Published On 2017-01-17 15:39 GMT   |   Update On 2017-01-17 15:39 GMT
ஆஸ்திரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
மெல்போர்ன்:

இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்க்க சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “பள்ளியில் எங்கள் மத நடைமுறைகள் மற்றும் அடையாளத்தை கடை பிடிக்கக் கூடாது என்று என்னுடைய மகன் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கிறான்.

இது தொடர்பாக விக்டோரியன் சம வாய்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் மூலம் எங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். மாணவர்கள் தங்களுடைய மத நம்பிக்கைகளை கடைபிடிக்க பள்ளிகள் அனுமதிக்காமல் இருப்பது நீதியற்ற செயல்” என்றார்.

இது தொடர்பாக எம்.சி.சி பள்ளி நிர்வாகம் அந்த ஆணையத்திற்கு எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளது. அதில் தங்களுடைய பள்ளி சீருடையில் நெறிமுறையில் அது இல்லை என்று கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுமார் 72 ஆயிரம் சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News