செய்திகள்

அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு: அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி விசாரணை

Published On 2017-01-16 09:00 GMT   |   Update On 2017-01-16 09:01 GMT
அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி விசாரணை நடத்துகிறது.
வாஷிங்டன்:

குடியரசு கட்சி வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனாட் டிரம்ப் வெற்றிபெற விளாடிமிர் புதின் உத்தரவின் பேரில் ரஷிய நாட்டின் உளவுத்துறை இணையதள ஊடுருவலில் ஈடுபட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, நினைத்ததை சாதித்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆளும் ஜனநாயக கட்சியின் இணையதளம் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஊடுருவிய ரஷிய ‘ஹேக்கர்கள்’ அவற்றில் இருந்து முக்கிய தகவல்களை சேகரித்து அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற உதவியதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க உள்நாட்டு உளவுத்துறை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி அறிவித்துள்ளது.

இந்த விசாரணையின்போது நேரில் ஆஜராகி வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு அமெரிக்க அரசின் முக்கிய உயரதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் இந்த கமிட்டி முடிவு செய்துள்ளது.

Similar News