செய்திகள்
கோப்பு படம்

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 218 மீனவர்கள் தாயகம் வந்தனர்

Published On 2017-01-07 10:13 GMT   |   Update On 2017-01-07 10:13 GMT
பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 218 மீனவர்கள் வாகா வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையை வந்தடைந்தனர்.
புதுடெல்லி:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், நல்லெண்ண அடிப்படையில் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரம் அவ்வவ்போது விடுதலை செய்யப்பட்டும் வருகின்றனர்.

அவ்வகையில், 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அவர்களை  நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரத்தில் சிறையில் இருந்த ஒரு மீனவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், சிறையில் இருந்த 218 இந்திய மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் லாகூருக்கு சென்று, அங்கிருந்து வாகா வழியாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி எல்லையை நேற்று பின்னிரவு சுமார் ஒரு மணியளவில் வந்தடைந்தனர்.

இந்திய மண்ணுக்குள் நுழைந்த அவர்களை எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு படையினர் அன்புடன் வரவேற்றனர்.

கடந்த 10 நாட்களில் இதுவரை 439 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிசம்பர் 25-ம் தேதி கராச்சி சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News