செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் தாக்கலான நவாஸ் ஷெரீப் பதவி பறிப்பு மனு தள்ளுபடி

Published On 2016-12-15 23:17 GMT   |   Update On 2016-12-15 23:17 GMT
ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவியை பறிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
லாகூர்:

ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பதவியை பறிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து லாகூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் பைசல் நசீர் என்பவர் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் அவர் கூறி இருந்ததாவது:-

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது தம்பியும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப்பும் பல்வேறு திட்டங்களில் ஊழல் புரிந்துள்ளனர். இது குறித்து பனாமா ஆவணங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

அனைத்து அரசு அமைப்புகளிலும் எந்த பொறுப்பும் கடமையும் இல்லாமல், ஊழல் பரவலாக உள்ளது. பல்வேறு துறைகளில் மட்டுமல்லாது, முக்கிய பதவிகளிலும் கூட திறமை இல்லாதவர்களும், ஊழல்வாதிகளும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் ஊழல் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம், பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது தம்பி ஷாபாஸ் ஷெரீப்பும்தான்.
நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது பிள்ளைகளின் ஊழல், பனாமா ஆவணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நவாஸ் ஷெரீப்பும், அவரது சகோதரரும் வகித்து வருகிற பதவிகளை பறிப்பதோடு, இனிமேல் அவர்கள் எந்த அரசு பதவியும் வகிக்க முடியாதபடிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி ஷாம்ஸ் மக்மூத் மிர்சா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் அவர் அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது அல்ல என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நிம்மதி அடைய வைத்துள்ளது.

இதேபோன்று பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரீப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், பதவிப்பிரமாணத்துக்கும், கோர்ட்டு உத்தரவுகளுக்கும் எதிராக செயல்பட்டுள்ளதாக கூறி, அவரது பதவியை பறிக்க கேட்டு தாக்கலான மற்றொரு வழக்கை லாகூர் ஐகோர்ட்டில் நீதிபதி ஆயிஷா மாலிக் விசாரித்தார்.

பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் பஞ்சாப் மாகாண தலைவர் இஜாஸ் சவுத்திரி தாக்கல் செய் துள்ள இந்த வழக்கும் விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி நீதிபதி ஆயிஷா மாலிக் தள்ளுபடி செய்து உத்தர விட்டார். 

Similar News