செய்திகள்

இரு மடங்கு வேகம், நான்கு மடங்கு தூரம் : ப்ளூடூத் 5 அறிமுகம்

Published On 2016-12-08 10:58 GMT   |   Update On 2016-12-08 10:58 GMT
உலகெங்கும் அதிகளவு பயன்படுத்தப்படும் வயர்லெஸ் தொழில்நுட்பமாக விளங்கி வரும் ப்ளூடூத் தொழில்நுட்பம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

உலகில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வயர்லெஸ் தொழில்நுட்பமான ப்ளூடூத் 4.2 சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் புதிய அப்கிரேடு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக ப்ளூடூத் 5 அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்ப தளமாகவும், இனி வரும் பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தவும் ப்ளூடூத் 5 தயார் நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ப்ளூடூத் 5 தொழில்நுட்பத்தில் நீண்ட தூரம், அதிக வேகம் மற்றும் அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ் திறன் போன்றவை முக்கிய மேம்படுத்தல்களாக இருக்கின்றன. சிறப்பம்சங்களை பொருத்த வரை இரு மடங்கு அதிகமான, தரவு பரிமாற்ற வேகமும், நான்கு மடங்கு பரப்பளவு தூரமும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு வழக்கத்தை விட எட்டு மடங்கு அதிகளவு பிராட்காஸ்ட் மெசேஜ்களையும் அனுப்ப முடியும். 

ப்ளூடூத் 5 பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் அணியக்கூடிய சாதனங்களான ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு இதர பயன்பாடுகளுக்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'வளர்ந்து வரும் IoT தலைமுறையில் ப்ளூடூத் 5, மற்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களுடன் எவ்வித சிரமமும் இன்றி இணைந்து வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது,' என ப்ளூடூத் நிர்வாக இயக்குனர் மார்க் பாவெல் தெரிவித்துள்ளார்.

Similar News