செய்திகள்

ஜெயலலிதா மறைவுக்கு இலங்கை அரசு இரங்கல்

Published On 2016-12-08 01:47 GMT   |   Update On 2016-12-08 01:47 GMT
தமிழக முன்னால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இலங்கை மக்கள் மற்றும் இலங்கை அரசு இணைந்து இரங்கலை தெறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர். அதனை ஆறுமுகம் தொண்டமான் எம்.பி. தலைமையில் ஊவா மாகாண பொறுப்பு முதல்-மந்திரி செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை விவசாயத்துறை மந்திரி எம்.ராமேஸ்வரன், இலங்கை துணைத்தூதர் வி.கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைத்தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னையில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் நேற்று ஒப்படைத்தனர்.

அதில், ஜெயலலிதா மரணமடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தோம். அவர் தமிழக மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தவர். தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். இந்திய அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் பங்களிப்பு மிகவும் உயரியது. ஜெயலலிதா ஒரு புரட்சிக்கரமான தலைவராக விளங்கினார். ஏழை மக்களின் நலன் சார்ந்தவர் என்பதால், அவரை மக்கள் ‘அம்மா’ என்று பாசத்துடன் அழைத்து வந்தனர். இந்தியா சிறந்த ஒரு பெண் அரசியல்வாதியை இழந்துவிட்டது. இலங்கை மக்கள் மற்றும் இலங்கை அரசு இணைந்து ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஜெயலலிதாவின் மறைவுக்கு ஜெர்மனி நாட்டின் தூதர் ஆச்சிம் பேபிக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Similar News