செய்திகள்

இந்தியாவில் நடைபெறும் ‘ஆசியாவின் இதயம்’ உச்சி மாநாட்டில் பங்கேற்போம்: பாகிஸ்தான் அறிவிப்பு

Published On 2016-10-25 10:41 GMT   |   Update On 2016-10-25 10:41 GMT
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஆலோசிக்க பஞ்சாப் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பங்கேற்போம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் ‘ஆசியாவின் இதயம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அதன் அண்டை நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானுடனான பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதன்படி, 9-12-2015 அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஐந்தாவது ‘ஆசியாவின் இதயம்’ மாநாடு நடைபெற்றது. வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி பஞ்சாப் மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் அடுத்த மாநாடு நடைபெறவுள்ளது.

ரஷியா, சீனா, துருக்கி உள்பட ‘சார்க்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள 14 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளும், அமெரிக்கா உள்ளிட்ட 17 இதரநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கும் இந்த மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியும் கூட்டாக தலைமை ஏற்கின்றனர்.

இந்நிலையில், அமிர்தசரஸ் நகரில் நடைபெறும் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக ஆலோசகரான சர்தாஜ் அஜீஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் நலம்சார்ந்த விவகாரம் என்பதால் அந்நாட்டின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான அனைத்துவித நடவடிக்கைகளியும் நாங்கள் (பாகிஸ்தான்) தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளோம்.

எனவே, வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பாகிஸ்தான் கலந்துகொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் விரும்புகின்றன. எனவே, இம்மாநாட்டில் நாங்கள் கலந்துகொள்வோம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டுள்ளார்.

உரி தாக்குதலையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பூசல் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தானின் இந்த அறிவுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News