செய்திகள்

பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Published On 2016-10-25 05:20 GMT   |   Update On 2016-10-25 05:20 GMT
பாகிஸ்தானில் தீவிரவாத தலைவர் உள்பட 5100 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது. அதற்கான நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் 5100 பேரின் வங்கி கணக்குகளை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது.

அவர்களில் ஜெய்ஸ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் முக்கியமானவர் ஆவார். காஷ்மீர் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்.

தற்போது இவர் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். வங்கி கணக்குகள் 3 பிரிவுகளில் முடக்கப்பட்டுள்ளது. அதில் மசூத் அசாரின் வங்கி கணக்கு 1997-ம் ஆண்டு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எனப்படும் ‘ஏ’ பிரிவின் கீழ் உள்ளது.

இவர் தவிர லால் மஸ்ஜித் மதரு மவுலானா அஜீஸ், அக்லே சன்னட் வால் ஜமாத் தலைவர்கள் மவுலவி அகமது லுதியான்வி, அவுரங்கசீப் பரூக்கி, அல்கொய்தாவை சேர்ந்த மதியுர் ரஹ்மான் உள்ளிட்டோரும் அடங்குவர்.

5100 பேரின் ரூ.2,700 கோடி (400 மில்லியன் டாலர்) பணம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News