செய்திகள்

விமானம் பழுதானதால் நியூசிலாந்து பிரதமரின் இந்திய வருகையில் தாமதம்

Published On 2016-10-24 09:56 GMT   |   Update On 2016-10-24 09:56 GMT
இந்தியாவுக்கு இன்று வருவதற்கு திட்டமிட்டிருந்த நியூசிலாந்து நாட்டு பிரதமரின் பயணம் அவரது விமானம் ஆஸ்திரேலியாவில் திடீரென்று பழுதானதால் தாமதமாகியுள்ளது.
சிட்னி:

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ இன்று இந்தியாவுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மும்பை நகரில் நடைபெறும் இந்திய தொழிலதிபர்கள் கருத்தரங்கில் அவர் பங்கேற்கவும், நாளை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்தியா - நியூசிலாந்து இடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முன்னர்திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நியூசிலாந்து பிரதமரின் சிறப்பு விமானம் ஆக்லாந்து நகரில் உள்ள வெனுவப்பை விமான நிலையத்தில் இருந்து இன்றுகாலை புறப்பட்டது. வழியில் ஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள டவுன்ஸ்வில்லி பகுதியில் பெட்ரோல் நிரப்புவதற்காக விமானம் தரையிறங்கியது.

பெட்ரோல் நிரப்பியபிறகு திடீரென்று ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பிரதமரின் விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நியூசிலாந்தில் இருந்து மாற்றுவிமானம் வரவழைக்கப்பட்டவுடன் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை இந்தியாவுக்கு புறப்பட்டு செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவித்திருந்தபடி பிரதமரின் விமானம் மும்பைக்கு செல்லாமல் நேராக டெல்லி வந்து சேரும். மும்பை நகரில் நடைபெறும் இந்திய தொழிலதிபர்கள் கருத்தரங்கில் ஜான் கீ அவர் பங்கேற்க மாட்டார். நாளை பிரதமர் மோடியுடனான சந்திப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என நியூசிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News