செய்திகள்

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

Published On 2016-09-30 14:29 GMT   |   Update On 2016-09-30 14:29 GMT
பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
பாரிஸ்:

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பல்வேறு நாடுகள் ஒப்புதல் அளித்து வருகின்றன. இந்தியாவும் அக்டோபர் 2-ம் தேதி கையெழுத்திடுவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் இதுவரை சுமார் 60 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் சுற்றுச் சூழல் அமைச்சர் சிகோலென் ராயல் டுவிட்டர் மூலம் இந்த தகவலை தெரிவித்தார்.

இருப்பினும், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சில நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. புவி வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் இலக்கு.

பருவ நிலை மாறுபாடு பிரச்சினையை எதிர் கொள்ள வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,70,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News