செய்திகள்

குறைந்த ஆக்சிஜன் மட்டுமே கிடைப்பதால் அதிகநாள் உயிர்வாழும் திபெத்திய மக்கள்: ஆய்வில் தகவல்

Published On 2016-09-22 10:24 GMT   |   Update On 2016-09-22 10:24 GMT
குறைந்த அளவு ஆக்சிஜன் உள்ள சூழ்நிலைகள் காரணமாக திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பீஜிங்:

சீனாவில் மற்ற பகுதிகளை விட திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதுக்கு மேலும் ஏராளமானோர் வாழ்கிறார்கள்.

ஆனால் சீனாவில் மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு மக்கள் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. எனவே இது சம்பந்தமாக சீனாவில் உள்ள அறிவியல் அகாடமி உயிர்விஞ்ஞானம் கல்லூரி பேராசிரியர்கள் ஷாங்யாபிங், வூடாங்டாங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திபெத் பகுதியில் குறைவான ஆக்சிஜன் கிடைப்பதே அவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதற்கு காரணம் என்று ஆய்வில் தெரியவந்தது. உலகிலேயே திபெத் தான் உயரமான பகுதியாகும். கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 800 மீட்டர் உயரத்தில் திபெத் பகுதி அமைந்துள்ளது.

இதனால் அங்கு பூமியின் மற்ற பகுதிகளை விட ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது. எனவே திபெத் மக்களுக்கு சுவாசிப்பதற்கு போதிய ஆக்சிஜன் கிடைப்பதில்லை. அதே நேரத்தில் குறைந்த ஆக்சிஜனே இருந்தாலும் சிறப்பாக உயிர்வாழும் அளவுக்கு அவர்களுடைய உடலில் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுடைய உடலில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாகி உள்ளன. இதன் காரணமாகத்தான் அவர்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள் என்பது ஆய்வில் தெரிகிறது.

Similar News