செய்திகள்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண் அமெரிக்க ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்பு

Published On 2016-09-09 10:07 GMT   |   Update On 2016-09-09 10:07 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆசிட் வீச்சில் முகம் உருக்குலைந்தும் தன்னம்பிக்கையை தளரவிடாமல் ஆசிட் வீச்சுக்கு சம்பவங்களுக்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டுவரும் ரேஷ்மா குரைஷி நியூயார்க் நகரில் நடைபெற்ற பிரபல ஆடை வடிவமைப்பு அலங்கார போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று பூனைநடை பயின்ற காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
நியூயார்க்:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரை சேர்ந்த ரேஷ்மா குரைஷி என்ற இளம்பெண் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருதலை காதலில் உண்டான விபரீத விளைவாக, மைத்துனர் ஒருவரால் ஆசிட் வீச்சுக்கு இலக்கானார்.

அந்த கொடூர நிகழ்வுக்கு பின்னர் ரேஷ்மாவின் முக அழகும், பொலிவும் கெட்டதுடன் ஒருகண்ணின் பார்வையும் பறிபோனது. இருப்பினும், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஓரளவுக்கு முகத்தின் அமைப்பு மட்டும் சீரான நிலையில் உலகம் முழுவதும் ஆசிட்வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டு வருகிறார்.


‘அன்பு செலுத்துங்கள் - தழும்புகளை ஏற்படுத்தாதீர்கள்’  (Make Love Not Scars) என்ற சர்வதேச அமைப்பின் வீடியோ பிரச்சாரகராக திகழும் ரேஷ்மாவுக்கு தற்போது 19 வயதாகின்றது. இவரது பிரசார வீடியோவை சுமார் 15 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதன்மூலம் பலரது கவனத்தையும் ரேஷ்மா வெகுவாக ஈர்த்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ‘பேஷன் வீக்’ ஆடை வடிவமைப்பு அலங்கார போட்டியின் தொடக்க விழாவில் ரேஷ்மா குரைஷி பங்கேற்று பூனைநடை பயின்ற காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


நியூயார்க் நகரில் எப்.டி.எல். கோடா என்ற நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் ஆடை வடிவமைப்பு அலங்கார போட்டியில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பிறபாதிப்புகளுக்கு உள்ளான பெண்கள் வழக்கமாக மாடல்களாக பங்கேற்பது வழக்கம்.

அவ்வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் என்பவர் உருவாக்கிய வெள்ளைநிற எம்ப்ராய்டரி உடை அணிந்து, விழா மேடையில் பூனைநடை பயின்று, பார்வையாளர்களையும், நடுவர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

Similar News