மதுரையில் மாயமான பச்சை கிளியை போஸ்டர் ஒட்டி தேடும் முதியவர்
- கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது.
- கிளி மாயமானதால் சுப்பு ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பல இடங்களில் தேடி வந்தனர்.
மதுரை:
மதுரை தெற்கு வெளியை சேர்ந்தவர் சுப்புராமன். இவர் வீட்டில் கடந்த 18 மாதங்களாக ஒரு பச்சை கிளியை பாசமாக வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு "வெல்வெட்" என்று பெயர் சூட்டி இருந்தார். அந்த கிளிக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி கொடுப்பார்.
கடந்த 20-ந் தேதி வீட்டின் கதவு திறந்து இருந்ததால் கிளி அங்கிருந்து வெளியே பறந்து சென்றுவிட்டது. கிளி மாயமானதால் சுப்பு ராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பல இடங்களில் தேடி வந்தனர்.
அது பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் கிளி பற்றி தகவல் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று போஸ்டர் அடித்து நகரம் முழுவதும் ஒட்டி உள்ளனர். அதனை பார்த்துவிட்டு சிலர் தகவல்களை தெரிவித்து உள்ளனர். இருந்தபோதிலும் குறிப்பிட்ட கிளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுபற்றி சுப்புராமன் கூறும்போது, முதலில் லவ்பேர்ட்ஸ் பறவைகளை வளர்த்து வந்தேன். தற்போது வெல்வெட் கிளியை வளர்த்து வந்தேன். அது குடும்ப நபர்களிடம் மிகவும் பாசமாக பழகியது. பெயரை சொல்லி அழைத்தால் குரல் கொடுக்கும். அது ஒரு பெண் கிளி. அது கிடைக்காதது குடும்பத்தினர் மனதை மிகவும் வேதனைப்படுத்திவிட்டது. விரைவில் அந்த கிளி கிடைத்துவிடும். எங்கள் மகிழ்ச்சி திரும்பி விடும் என்று நம்புகிறோம் என்றார்.