செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
- 30-ம் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.
- கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது.
விழுப்புரம்:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கீரம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது 60). இவரது தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மதுரையில் இறந்தார். நேற்று அவருக்கு 30-ம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி (52) மகன்அழகுவேல் ராஜா, மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி (22) ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். காரை முத்து ராஜேந்திரன் ஓட்டினார்.
இந்த கார் இன்று அதிகாலை விழுப்புரம் அருகே வளத்தி -அருள் நாடு கல்லறை பகுதியில் சென்றது. அப்போது செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி லாரி வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்குநேர் மோதியது.
இந்த விபத்தில் ராஜேந்திரன், மனைவி சாந்தி மற்றும் அழகு ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சகுந்தலா தேவி, பலத்த காயம் அடைந்தார்.
தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த சகுந்தலா தேவியை மீட்டு செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்தில் உயிர் இழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குபதிந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம்வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் என்பவரை கைது செய்தனர்.