தமிழ்நாடு

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா டோக்கன் 40 மையங்களில் வழங்கப்படும்- போக்குவரத்து மேலாண் இயக்குனர் தகவல்

Published On 2022-06-18 10:30 GMT   |   Update On 2022-06-18 10:30 GMT
  • சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும்.

சென்னை:

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

2022 ஜூன் மாதம் வரை பயணம் செய்யும் வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த அரையாண்டிற்கு, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் 40 மையங்களில், வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும்.

அதன் பின்னர், 1.8.2022 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல், 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங் களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையை மட்டும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News