தமிழ்நாடு

இனிமேலாவது நடவடிக்கை எடுங்க.. எடப்பாடி பழனிசாமி காட்டம்

Published On 2023-11-10 13:51 GMT   |   Update On 2023-11-10 13:51 GMT
  • பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
  • ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு அருகே உள்ள வீரபத்ர சாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், கோயில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், "சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன்."

"நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த விடியா திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் முழுத்தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்."

"முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர்."

"எதிலும் அக்கறையின்றி செயல்படும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர் வெறும் வாய்ச்சவடால் இன்றி இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News