நீதிபதி விலகலை வலைத்தளங்களில் வரவேற்று மகிழ்ந்த ஓ.பி.எஸ். அணி
- வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார்.
- தனி நீதிபதி விலகியதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலைத்தளங்களில் பதிவேற்றி கொண்டாடினார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். நீதித்துறையை தரம் தாழ்த்தும் வகையில் அமைந்து இருப்பதாக குறிப்பிட்டார்.
இதனால் சிக்கலுக்குள்ளான ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் மன்னிப்பு கோரப்பட்டது. தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அதை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார். வேறு நீதிபதியை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரையும் செய்தார். புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனி நீதிபதி விலகியதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலைத்தளங்களில் பதிவேற்றி கொண்டாடினார்கள்.
பொதுக்குழுவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறும் வீடியோ காட்சி, தனி நீதிபதி விலகல் என்ற அறிவிப்பு ஆகியவற்றை தங்கள் ஸ்டேட்டஸ்களில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.