தமிழ்நாடு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ருத்ராபிஷேகம் செய்து ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரசாதம் வழங்கினர்.

ராமேசுவரத்தில் 5 மணி நேரம் சிறப்பு ஹோமம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம்

Published On 2022-09-19 06:04 GMT   |   Update On 2022-09-19 09:43 GMT
  • ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
  • தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளார்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் சகல தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. ராவணனை வதம் செய்து விட்டு வந்த ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக மணல் லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார் என்பது புராண தகவல்.

ராமேசுவரம் கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராமேசுவரம் வந்து அங்குள்ள ஒரு தனியார் மடத்தில் ௫ மணி நேரம் சிறப்பு ஹோமம் செய்தார். அங்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் செய்து மூலவருக்கு ருத்ராபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு பல ஜென்ம பாவங்களை போக்கும் என்றும், குடும்ப அபிவிருத்தியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்த நிலையில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதில் அ.தி.மு.க. முக்கிய தலைவர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் இரு துருவங்களாக பிரிந்து விட்டனர்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் பின்னடைவை சந்தித்துள்ளார். எனவே மீண்டும் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதற்காக ஜோதிடர்களின் ஆலோசனையின்பேரில் ஓ.பன்னீர்செல்வம் இந்த வழிபாடுகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

ராமேசுவரத்தில் வழிபாடுகளை முடித்துக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் காசிக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News