தமிழ்நாடு

சென்னை ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்- ஐகோர்ட் எச்சரிக்கை

Published On 2022-08-01 08:55 GMT   |   Update On 2022-08-01 08:55 GMT
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
  • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

சென்னை:

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும். இது குறித்து கடந்த மார்ச் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

இதுபோன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.

எனவே, ஐகோர்ட்டு உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.

அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளி வைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News