தமிழ்நாடு

முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு... ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published On 2022-08-11 16:04 GMT   |   Update On 2022-08-11 16:04 GMT
  • அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
  • தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், முக கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் கூறியிருந்தார். மேலும் முக கவசம் அணியாவிட்டால் 500 ருபாய் அபராதம் விதிப்பது தவறு என்றும், 500 ரூபாய் என்பது குறைந்த தொகை அல்ல என்றும் கூறிய அவர், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், போதிய ஆய்வுகள் எதுவும் இன்றி உரிய ஆவணங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News