தமிழ்நாடு

மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததால் விவசாயியை கொன்றேன்: கைதான வியாபாரி வாக்குமூலம்

Published On 2023-09-22 09:40 GMT   |   Update On 2023-09-22 09:40 GMT
  • நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன்.
  • வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.

நேற்று அவர் தோட்டத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு மொபட்டில் வந்த ஒரு நபர் அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் ஆத்திரம் தீராத அந்த நபர் வேல்முருகனின் தலையை அரிவாளால் துண்டித்து சாக்கு மூட்டையில் தலையை போட்டு கட்டி தனது மொபட்டில் எடுத்துச்சென்றார்.

இதுகுறித்து ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்முருகன் தலையை தேடிவந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன் வேல்முருகனின் தலை கிடந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இசக்கியம்மாளின் கணவரான ஆலங்குளம் அருகே உள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த இளநீர் வியாபாரியான வேல்சாமி(37) என்பவர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் வேல்சாமி கூறியதாவது:-

எனக்கும், எனது மனைவிக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிகுளத்தில் வசித்து வந்தேன்.

அப்போது எனது மாடுகள் வேல்முருகனின் தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக எனக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் நான் கயத்தாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விட்டேன். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் மீண்டும் கண்ணாடிகுளத்தில் குடியேறினேன்.

பின்னர் வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால் அவர்கள் 2 பேரையும் குறித்து நான் சந்தேகம் அடைந்தேன். இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் அவர் என்னை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான், எனது மனைவியை பிரிந்ததற்கு வேல்முருகன் தான் காரணம் என்று எண்ணினேன். இதனால் அவரை நேற்று வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

Tags:    

Similar News