தமிழ்நாடு

கயிறு கட்டி பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்.

சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கனமழையால் சிக்கி தவிப்பு- நள்ளிரவில் கயிறு கட்டி மீட்பு

Published On 2022-07-29 05:31 GMT   |   Update On 2022-07-29 05:31 GMT
  • வெள்ளிமலை வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது.
  • ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு அருகே வனப்பகுதி வழியாக பக்தர்கள் சதுரகிரிக்கு நடந்து சென்றனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வெள்ளிமலை வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது. தொடர்ந்து மழையால் இன்று காலை மூலவைகை ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

இதனிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு வருசநாடு அருகே வனப்பகுதி வழியாக ஏராளமான பக்தர்கள் கடந்த 2 நாட்களாக சதுரகிரிக்கு நடந்து சென்றனர். அவர்களை வனத்துறையினர் சோதனை செய்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தி வந்தனர்.

கோவிலுக்கு சென்று பக்தர்கள் திரும்பி கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் யானைகஜம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் எங்கும் செல்லமுடியாதபடி பக்தர்கள் தவித்தனர். செல்போன் தொடர்பும் கிடைக்கவில்லை.

இதனைதொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்த பக்தர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அதிகாலை 1.15 மணியளவில் பக்தர்கள் அனைவரையும் கயிறு கட்டி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அனைத்து பக்தர்களும் மீட்கப்பட்டு விட்டார்களா என்பதை உறுதி செய்த பிறகு தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து சென்றனர்.

நள்ளிரவில் சிக்கி தவித்த பக்தர்கள் அனைவரையும் மீட்ட தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துகொண்டனர்.

Tags:    

Similar News