தமிழ்நாடு

50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்சார இணைப்பு- முதலமைச்சர் வழங்கினார்

Published On 2023-01-11 06:11 GMT   |   Update On 2023-01-11 06:11 GMT
  • திட்டம் தொடங்கப்பட்டு 61 நாட்களிலேயே 50,000 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கி வரலாறு படைத்துள்ளது.
  • தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு விரிவடைந்து, விளைச்சல் அதிகரித்து, உற்பத்தியும் பெருகி வருகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50,000 விவசாய பயனாளர்களில் 50,000-வது பயனாளி உள்பட 5 நபர்களுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும், இவ்வரசு பொறுப்பேற்றவுடன், இதற்கு முன் எந்த அரசும் செய்திடாத ஒரு சாதனையாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஓர் ஆண்டில் இலவச மின்சாரம் என அறிவித்ததுடன், அறிவித்த ஆறே மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் மக்களுக்கான இந்த அரசு, தமிழ்நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திடும் விதமாக, 2022-2023-ம் ஆண்டு எரிசக்தித்துறை மானியக் கோரிக்கையில், இந்த நிதியாண்டிலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 11.11.2022 அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, அன்றைய தினமே 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. 

மேலும், இத்திட்டம் 100 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று அன்றைய தினம் விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் இந்த அரசின் செயல்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக, இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான 11.11.2022-ல் இருந்து 61 நாட்களிலேயே, அதாவது 9.01.2023 அன்றே, 50,000 விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கி வரலாறு படைத்துள்ளது.

இதன்மூலம், இவ்வரசு பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கி புதிய சாதனை படைத்திருக்கிறது.

இதனால், தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு விரிவடைந்து, விளைச்சல் அதிகரித்து, உற்பத்தியும் பெருகி வருகிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News