தமிழ்நாடு

ஓடும் பஸ்சில் தரையில் காலை உரசியபடி சாகசம் செய்யும் பள்ளி மாணவர்.


பஸ்சில் தொங்கியபடி தரையில் காலை உரசி சாகச பயணம் செய்த பிளஸ்-1 மாணவர் கைது

Published On 2022-09-27 11:53 GMT   |   Update On 2022-09-27 11:53 GMT
  • படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார்.
  • மாணவர்கள் இதுபோல் பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம் செய்யக் கூடாது என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

ராயபுரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகர பஸ்கள் மற்றும் ரெயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் தொங்கியபடி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.

போலீசார் பல்வேறு எச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் சாகச பயணம் நீடித்து வருகிறது. இதனை கண்டிக்கும் பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களிடம் அவர்கள் பல இடங்களில் மோதலில் ஈடுபடும் நிலையும் நீடிக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் மாநகர பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாரிமுனையில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் ஒன்று சென்றது.

இதில் பயணம் செய்த மாணவர் ஒருவர் படிக்கட்டில் நின்றபடி ஆபத்தான பயணம் செய்தார். மேலும் அவர் படிக்கட்டில் தொங்கியபடி இரண்டு கால்களையும் தரையில் உரசி சாகசம் செய்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர் கண்டித்தும் அந்த மாணவர் கண்டு கொள்ளாமல் தனது சாகச பயணத்தை தொடர்ந்தார்.

இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் சாகச பயணம் செய்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தண்டையார் 'பேட்டை போலீசிலும் புகார் செய்தார்.

போலீசார் வீடியோ பதிவை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த மாணவன் அணிந்து இருந்த சீருடையை வைத்து அடையாளம் கண்டனர். அவர், கொருக்குப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவது தெரிந்தது.

இதையடுத்து அந்த மாணவரை போலீசார் கைது செய்தனர். அவர்மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து அறிவுரை கூறினர்.

மாணவர்கள் இதுபோல் பஸ்சில் தொங்கியபடி சாகச பயணம் செய்யக் கூடாது என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ரெயிலில் படிக்கட்டில் நின்ற படி பிளாட்பாரத்தில் கத்தியை உரசி சென்ற சென்னை கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News