தமிழ்நாடு

அகதிகளாக வந்த 7 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை

இலங்கையில் இருந்து 2 குடும்பத்தை சேர்ந்த 7 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

Published On 2022-07-19 08:06 GMT   |   Update On 2022-07-19 08:06 GMT
  • பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ராமேசுவரம்:

இலங்கையில் கடும் பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். பொருளாதார சீரழிவை கண்டித்து தலைநகர் கொழும்புவில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக இதே நிலை நீடிப்பதால் இலங்கைவாழ் தமிழர்கள் கள்ள தோணி மூலம் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை 120-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 5-வது மணல் திட்டில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 இலங்கை தமிழர்கள் தவித்து நின்றிருந்தனர். அவர்களை பார்த்த தனுஷ்கோடி நாட்டுப்படகு மீனவர்கள் உடனே மண்டபம் போலீசாருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஹோவர்கிராப்ட் மூலம் கடலோர காவல்படை போலீசார் 7 இலங்கை தமிழர்களையும் மீட்டு மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேரி அகஸ்டா (44), இவரது மகன்கள் நிசர்கான் ஆகாஷ் (16), கெவின் (12) மற்றும் திரிகோணமலையைச் சேர்ந்த மகேசன் (39), இவரது மனைவி தேவி (38), மகன்கள் தினேஷ் (10), ஹமூசன் (6) என தெரியவந்தது. இவர்கள் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

Tags:    

Similar News