தமிழ்நாடு
மாதையன்

வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்

Published On 2022-05-25 04:35 GMT   |   Update On 2022-05-25 04:35 GMT
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாதையன் உயிரிழந்தார்.
சேலம்:

சந்தன மர கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் (வயது 74). இவர் கடந்த 1987-ம் ஆண்டு சத்தியமங்கலத்தில் ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன் சத்தியமங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட மாதையன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவரது உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாதையன் இன்று காலை இறந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. அவரது உடலை வாங்க மாதையனின் மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்கள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதையொட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருந்த மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News