மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகைகள் கொள்ளை
மதுரை:
மதுரையில் பூட்டிய வீடுகளை குறி வைத்து நகை பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரை வீரபாஞ்சான் அருகே உள்ள ஒடைப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் தண்ணீரை சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதை தொடர்ந்து நேற்று முருகனும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டுக்கு வந்த முருகன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 100 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. அதனை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டதை அறிந்து கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று முருகனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது 67 பவுன் நகைகளுக்கான ஆவணங்களை முருகன் காட்டினார். மீதம் உள்ள நகைகளுக்கான ஆவணங்கள் இல்லை.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது வெளியூர் கொள்ளை கும்பலா? அல்லது அதே பகுதியை சேர்ந்த நபர்களா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன்நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.