மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உயர்வு
மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2 ஆயிரத்து 973 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 610 கன அடியாக அதிகரித்தது. இன்றும் நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரத்து 609 கன அடி வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 104.99 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.10 அடியானது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.