செய்திகள்
ஊட்டி மலை ரெயில் (கோப்புப்படம்)

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் 15-ந்தேதி வரை ரத்து

Published On 2021-11-01 04:01 GMT   |   Update On 2021-11-01 04:01 GMT
தீபாவளியை கொண்டாடுவதற்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு இடையே செல்வதால் அனைவரும் இந்த ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் இந்த அழகிய மலை ரெயிலில் குடும்பத்தோடு பயணித்து, காட்டில் உள்ள இயற்கை காட்சிகளையும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து மகிழ்வார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை ரெயில் செல்லக்கூடிய தண்டவாளத்தில் அடிக்கடி மண்சரிவுகளும், பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த 23-ந் தேதி தொடர் மழைக்கு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால் தண்டவாளம் சேதம் அடைந்தது. இதனால் மலைரெயில் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி மலைரெயில் போக்குவரத்து வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் தீபாவளியை கொண்டாடுவதற்காக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் சுற்றுலா செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News