ராமநாதபுரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் - பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்
ராமநாதபுரம்:
கொரோனா 2-ம் அலைப்பாதிப்பின் போது பெரும்பாலான மருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனை போக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் திரவ நிலை ஆக்சிஜன் டேங்க் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. ஏற்கனவே, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 11 ஆயிரம் கிலோ லிட்டர் திரவநிலை ஆக்சிஜன் டேங்க் அமைக்கப்பட்டது.
அதன் அருகில் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுத்து நோயாளிகளுக்கு வழங்கும் வகையில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன்உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.
நாட்டின் ராணுவ ஆய்வு மேம்பாட்டு கழகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று (அக்.7) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பொறுப்பு காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் இதே போன்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா: தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டமா?