மதுரை அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்
மதுரை:
மதுரை ஆரப்பாளையம் மெய்யப்பன் 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47). இவரது மனைவி வாகேஸ்வரி (44). இவர்களுக்கு சக்தி (11), மாதங்கி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். பிரபாகரன் தொழிலுக்காக பல பேரிடம் கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த பிரபாகரன், மனைவி வாகேஸ்வரி, மகள்கள் சக்தி, மாதங்கி ஆகியோருடன் கடந்த ஆண்டு (2020) ஜனவரி 14-ந்தேதி வீட்டை காலி செய்துவிட்டு மாயமாகிவிட்டார். அவர் எங்கே சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பிரபாகரனின் அண்ணன் பாஸ்கரன், மதுரை ஐகோர்ட்டில் தம்பி குடும்பத்தினரை கண்டுபிடித்து தருமாறு வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மதுரை கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பிரபாகரன் குடும்பத்தினரை தேடி வருகிறார்கள்.