செய்திகள்
ஓட்டலில் இருதரப்பினர் அங்குள்ள சேரை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சி.

கோவில்பட்டியில் இருதரப்பினர் மோதலால் போர்க்களமான ஓட்டல்

Published On 2021-09-23 08:46 GMT   |   Update On 2021-09-23 08:46 GMT
ஓட்டலில் இருதரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பார்க் அருகே ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு அந்த ஓட்டலுக்கு வீரவாஞ்சி நகரை சேர்ந்த சிலர் சாப்பிட வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே கிருஷ்ணா நகரை சேர்ந்த சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அந்த ஓட்டலில் வழக்கமாக வீரவாஞ்சி நகரை சேர்ந்த வாலிபர்கள் சாப்பிட வருவது வழக்கம் என்பதால் ஓட்டல் ஊழியர்கள் அவர்களுடன் சகஜமாக சிரித்து பேசி உணவு வழங்கி கொண்டிருந்தனர்.

ஆனால் தங்களை பார்த்து தான் அவர்கள் சிரிப்பதாக நினைத்த மற்றொரு தரப்பினர், எங்களை பார்த்து ஏன் சிரிக்கின்றீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் உங்களை பார்த்து சிரிக்கவில்லை என்று கூறியும் அவர்கள் ஏற்கவில்லை.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது. அப்போது அவர்கள் அங்கிருந்த சேர், தண்ணீர் செம்பு, சாம்பார் வாளி என அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ஒருவருக்கு ஒருவர் வீசி தாக்கி கொண்டனர்.

இதனால் அந்த ஓட்டலே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டலில் இருதரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News